புதுடெல்லி: முதலில் பைக் மீது கார் மோதியது. அடுத்து, தலையின் மீது மின் கம்பம் விழுந்தது. ஆனால், ஹெல்மெட் அணிந்து இருந்ததால், 2 விபத்திலும் அந்த நபர் உயிர் பிழைத்தார். இந்தியாவில் நடக்கும் பெரும்பாலான பைக் விபத்துகளில், தலையில் அடிபட்டு இறப்பவர்கள் எண்ணிக்கையே அதிகம். அதனால்தான், ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. மேலும், ‘தலைக்கவசம்; உயிர் கவசம்’ என்றெல்லாம் விழிப்புணர்வு பிரசாரமும் செய்யப்படுகிறது. இருந்தாலும், பலர் இதை சீரியசாக எடுத்து கொள்வதில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு, ஹெல்மெட்டின் அருமையை உணர்த்தும் சம்பவம், டெல்லியில் நடந்துள்ளது. டெல்லி போலீசார் தனது டிவிட்டர் பக்கத்தில் நேற்று, ‘ஹெல்மெட் அணிபவர்களை கடவுள் காப்பாற்றுவார்’ என்று பதிவிட்டு, ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.அதில், ஒரு கார் சாலையின் மறுபுறம் செல்ல முயற்சிக்கிறது. அப்போது, வேகமாக வரும் பைக் ஓட்டி, கார் மீது பயங்கரமாக மோதி பல அடி தூரத்துக்கு சென்று விழுகிறார். அவருடைய பைக், சாலையின் நடுவில் இருந்த மின் விளக்கு கம்பத்தின் மீது மோதுகிறது. கார் மீது மோதியதால் கீழே விழுந்த பைக் ஓட்டி, காயமின்றி எழுந்து நிற்கிறார். அடுத்த நொடி, பைக் மோதியதால் ஆட்டம் கண்ட மின் கம்பம், அவருடைய தலை மீது பயங்கரமாக விழுகிறது. அதிலும், அந்த நபர் உயிர் பிழைக்கிறார். இந்த 2 சம்பவத்திலும் தான் அணிந்திருந்த ஹெல்மெட்டால் அவர் உயிர் தப்பி இருக்கிறார். சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகி இருக்கிறது. …