திருவள்ளூர்: அத்திமாஞ்சேரிப்பேட்டை அண்ணா தெருவை சேர்ந்தவர் நித்தியானந்தம்(32), இவரது மனைவி தேவிகா(30). கணவன், மனைவி இருவரும் அரசுப் பள்ளியில் ஆசிரியர் வேலையில் சேர முயற்சி செய்து கொண்டிருந்தனர். இதுகுறித்து அறிந்த திருவாலங்காடு ஒன்றியம் கோபாலகிருஷ்ணாபுரம் அரசு துவக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் வெங்கடேசன்(52), திருத்தணி கெங்குசாமி நாயுடு மெட்ரிக் பள்ளியில் தற்காலிக துணை முதல்வர் டி.வி.வெங்கடேசன், சிறுகுமி அரசினர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் அருள் ஆகியோர் சேர்ந்து தம்பதியிடம், `நாங்கள் கல்வித்துறையில் பெரிய அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம். எனவே உங்களுக்கு அரசுப் பள்ளியில் ஆசிரியர் வேலை வாங்கித் தருகிறோம்’ என ஆசை வார்த்தை கூறியுள்ளனர். மேலும், ஆசிரியர் பணி கிடைக்க வேண்டுமானால் ரூ.12 லட்சம் தரவேண்டும் என தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து நித்தியானந்தம் கடந்த 2019ம் ஆண்டு ரூ.12 லட்சத்தை அவர்களிடம் கொடுத்துள்ளனர். பணத்தை பெற்றுக்கொண்ட 3 பேரும் ஒரு போலியான பணி நியமன ஆணையை தயார்செய்து அதனை உண்மையானதுபோல் காட்டி நித்தியானந்தத்திடம் கொடுத்துள்ளனர். அதனை வாங்கிய அவர் தன் மனைவியுடன் பணிக்கு சேர முயன்றுள்ளார். அப்போதுதான் அது போலியானது என தெரியவந்தது. பின்னர் 3 பேரும் தலைமறைவாகினர். இதனால் பாதிக்கப்பட்ட கணவன், மனைவி இருவரும் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.12 லட்சம் மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்பி வருண்குமாரிடம் புகார் அளித்தனர். அவரது உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி அசோகன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் குமார், சூரியகுமார், வாசுதேவன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், நேற்று திருத்தணி அருகே பதுங்கியிருந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியரான வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர். பிறகு அவரை திருத்தணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள கெங்குசாமி நாயுடு மெட்ரிக் பள்ளியின் துணை முதல்வர் வெங்கடேசன், மற்றும் சிறுகுமி அரசினர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் அருள் ஆகிய இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்….
தம்பதியிடம் ரூ.12 லட்சம் மோசடி; ஆசிரியர் கைது
previous post