வேலூர், செப்.6: அனைத்து பள்ளிகளில் பயிலும் பிளஸ்1 மாணவர்கள் தமிழ்மொழி இலக்கிய திறனறி தேர்வுக்கு வரும் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளின் அறிவியல், கணிதம் சார்ந்த ஒலிம்பியாய்டு தேர்வுகளுக்கு பெருமளவில் தயாராகி பங்கு பெறுவதைப் போன்று, தமிழ்மொழி இலக்கிய திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி 2023-2024ம் கல்வியாண்டிற்கான தமிழ்மொழி இலக்கிய திறனறி தேர்வு அடுத்த மாதம் 15ம் தேதி(ஞாயிறுக்கிழமை) நடத்தப்படவுள்ளது. இத்தேர்வில் 1500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை வழியாக மாதம் ₹1,500 வீதம் 2 வருடங்களுக்கு வழங்கப்படும். இத்தேர்வில் 50 விழுக்காடு அரசுப்பள்ளி மாணவர்களும், மீதமுள்ள 50 விழுக்காட்டிற்கு பிற தனியார் பள்ளி மாணவர்களும் தேர்வு செய்யப்படுவார்கள்.
தமிழ்நாடு அரசின் 10ம் வகுப்பு நிலையிலான பாடத்திட்ட அடிப்படையில் கொள்குறி வகையில் தேர்வு நடத்தப்படும். அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட தலைநகரங்களில் இத்தேர்வு நடத்தப்படும். 2023-2024ம் கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்சி உட்பட பிளஸ்1 வகுப்பு மாணவர்கள் அடுத்த மாதம் 15ம் தேதி நடக்க உள்ள இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் விண்ணப்பங்களை ‘www.dge.tn.gov.in’ என்ற இணையதளம் மூலம் நேற்று (5ம்தேதி) தொடங்கி வரும் 20ம்தேதி வரை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வு கட்டணத்தொகை ₹50யை சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வரும் 20ம்தேதி கடைசி நாள் ஆகும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.