Sunday, June 16, 2024
Home » தமிழ்நாட்டை அனைத்து வகையான பேரிடர்களையும் திறம்பட எதிர்கொள்ளும் மாநிலமாக மாற்றுவதே அரசின் நோக்கம் : முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி!!

தமிழ்நாட்டை அனைத்து வகையான பேரிடர்களையும் திறம்பட எதிர்கொள்ளும் மாநிலமாக மாற்றுவதே அரசின் நோக்கம் : முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி!!

by kannappan

சென்னை : ‘தமிழ்நாட்டை அனைத்து வகையான பேரிடர்களையும் திறம்பட எதிர்கொள்ளும் மாநிலமாக மாற்றுவதே அரசின் நோக்கமாகும்’ என்று தமிழ்நாடு மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் உறுதி அளித்துள்ளார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில், தமிழ்நாடு மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று (5-7-2021) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பேரிடர்களின் தாக்கத்தின்போது ஏற்படும் மனித உயிரிழப்புகள், பொதுச் சொத்துக்கள் மற்றும் உட்கட்டமைப்புகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை வெகுவாகக் குறைத்து, தமிழ்நாட்டை அனைத்து வகையான பேரிடர்களையும் திறம்பட எதிர்கொள்ளும் மாநிலமாக மாற்றுவதே அரசின் நோக்கமாகும் என்று உறுதிப்பட  தெரிவித்தார். அந்த நோக்கத்தைச் செயலாக்க மாநில மற்றும் மாவட்ட அளவில் அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும், சமீப காலமாக ஏற்படும் இயற்கைப் பேரிடர்கள் இயற்கையாக மட்டும் ஏற்படுவதில்லை, மனிதர்களும் இதற்கு பொறுப்பேற்றாக வேண்டுமென்று தெரிவித்தார். பருவகால சூழ்நிலை தற்போது சீராக இல்லை, இத்தகைய சூழலைப் புரிந்து நாம் நடந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.  பேரிடர் தடுப்புப் பணிகள் என்பது பேரிடர் காலங்களில் மக்களைக் காப்பது மட்டுமல்ல, அத்தகைய பேரிடர் ஏற்படாத சூழலை நாம் உருவாக்கிட வேண்டும் என்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டார். சென்னைப் பெருநகரத்தை வெள்ளநீர் சூழாமல் தவிர்க்க, பெருநகர வெள்ளநீர் மேலாண்மைக் குழு அமைக்கப்படும் என்று ஆளுநர் உரையில் குறிப்பிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், சென்னையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, கரைகளைப் பலப்படுத்திட ஒரு நிரந்தரத் திட்டத்தை உருவாக்கிட வேண்டுமென்று அறிவுறுத்தினார். அதேபோன்று, கடலூர் மாவட்டம் வெள்ளம் பாதிக்கும் மாவட்டமாக இருப்பதால், அதற்கும் நிரந்தரத் தீர்வு காணும் வகையில், பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளை முன்கூட்டியே ஆராய்ந்து செயல்பட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். இயற்கைப் பேரிடர் ஏற்படும் காலங்களில், அதிக அளவில் பாதிக்கப்படுபவர்கள் நகர்ப்புற ஏழை எளிய மக்கள், கிராமப் பகுதிகளின் விவசாயப் பெருங்குடி மக்கள் என்று சுட்டிக்காட்டிய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், அந்த பாதிப்புகளிலிருந்து அவர்களைக் காத்து, அவர்களின் இழப்புகளை ஈடுசெய்து மறுவாழ்வுக்கு வழிகோலுவதே அரசின் தலையாய நோக்கமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.பேரிடர்களின் அபாயம் மற்றும் பாதிப்புகளை குறைப்பதற்கான முன்னெச்சரிக்கை மற்றும் தணிப்பு நடவடிக்கைகளைப் பொது மக்களின் பங்களிப்புடன் மேற்கொள்ளவேண்டும் என்றும், பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்களின் பேரிடர்களை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்தி, ஒரு மக்கள் இயக்கமாக பேரிடர் மேலாண்மையின் செயல்பாடுகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.அதேபோன்று, பேரிடர் மீட்புப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள முன்வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனிமனிதர்களுக்கு அரசுத் துறைகளின் மூலம் உரிய பயிற்சி அளிக்க வேண்டும், அவர்களை ஊக்குவிக்க தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் மூலம் சிறப்பான திட்டம் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அலுவலர்களை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டார்.  பேரிடர்கள் குறித்த முன்னெச்சரிக்கைச் செய்திகள் அனைவரையும் சென்று சேரும் வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்ட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், மீனவர்களுக்குப் புயல், வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் குறித்த முன்னெச்சரிக்கைச் செய்திகள் உரிய நேரத்தில் கிடைக்கும் வகையில் பேரிடர் எச்சரிக்கை தகவல் திட்டம் மேம்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றும் அறிவுறுத்தினார். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பேரிடர் காலங்களில், நீர் நிலைகளின் வழிப்பாதைகள் பாதுகாப்பையும், அனைத்து மருத்துவமனைகளிலும் தடையில்லா மாற்று மின்சார வசதி உறுதியும் செய்யப்படவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.தமிழ்நாடு மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் என்ற முறையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பேரிடர்களின் தாக்கத்தைக் குறைக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள உறுதுணையாக இருப்பதாக உறுதியளித்தார்.  ஒரு அரசாங்கத்தின் முதலாவது பணி மக்களைக் காப்பதுதான் – அத்தகைய பணிக்கு நாம் அனைவரும் சேர்ந்து முக்கியத்துவம் கொடுப்பது தான் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார். …

You may also like

Leave a Comment

three × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi