ராமநாதபுரம். மார்ச் 12: தமிழ்நாடு அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொண்டு அதிகளவில் பயன்பெற்றிட வேண்டும் என ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் வலியுறுத்தியுள்ளார். ராமநாதபுரம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் நேற்று செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் மூன்றாண்டு சாதனை திட்டங்கள் குறித்த சிறப்பு புகைப்பட கண்காட்சி துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனை கலெக்டர் விஷ்ணு சந்திரன் திறந்து வைத்து கூறும்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கான திட்டங்கள் அறிவித்து கடந்த மூன்று ஆண்டுகளில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட திட்டங்கள் குறித்த புகைப்படம் மற்றும் உலக நாடுகளுக்கு சென்று தொழில் முதலீட்டாளர்களை சந்தித்த புகைப்படங்கள் மற்றும் தலைவர்கள், பயனாளிகள், பொதுமக்களுடன் கலந்துரையாடும் புகைப்படங்கள் என பொதுமக்கள் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் இக்கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒரு வார காலம் நடக்கும் இப்புகைப்பட கண்காட்சியினை பார்வையிட்டு அரசின் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்வது மட்டுமின்றி அரசின் திட்டங்களை பெற்று பயன்பெற வேண்டுமென தெரிவித்தார். நிகழ்ச்சியில் ராமநாதபுரம் நகர் மன்றத்தலைவர் கார்மேகம்,ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் பிரபாகரன், ராமநாதபுரம் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை அலுவலர் பாண்டி, ராமநாதபுரம் நகர்மன்ற துணைத் தலைவர் பிரவீன் தங்கம், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் விஜயகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.