* கண் மருத்துவமனை புகார் மூலம் அம்பலம்* 4 வடமாநில கொள்ளையர்கள் கைது* காவலில் எடுத்து விசாரிக்க முடிவுசென்னை: தமிழகத்தில் முதன்முறையாக தனியார் கண் மருத்துவமனையின் வங்கி கணக்கில் இருந்து ‘சிம் ஸ்வாப்’ முறையில் ரூ.24 லட்சம் மோசடி செய்த வழக்கில் 4 வடமாநில கொள்ளையர்களை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இதுபோல் வேறு எங்கேயாவது கைவரிசை காட்டியுள்ளார்களா என 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆழ்வார்பேட்டையில் உள்ள பிரபல தனியார் கண் மருத்துவமனை சார்பில் புகார் ஒன்று அளிக்கப்பட்டது. அதில், தங்களது மருத்துவமனையின் வங்கி கணக்கோடு இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண்ணின் சேவையை துண்டித்து, அதே எண்ணில் புதிய ‘சிம்கார்டு’ பெற்று எங்களது மருத்துவமனை வங்கி கணக்கில் இருந்து ரூ.24 லட்சத்தை வேறு கணக்கிற்கு மாற்றி நூதன முறையில் திருடி உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. புகாரின்படி நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதில், தனியார் கண் மருத்துவமனையின் பெயரில் உள்ள போலியான அடையாள அட்டைகளை சமர்ப்பித்து இ-சிம் கார்டு பெற்று உத்தரப்பிரதேசத்தில் அந்த ‘சிம்’மை ஆக்டிவேட் செய்தது தெரியவந்தது. அதன் பிறகு தனியார் கண் மருத்துவமனையின் வங்கி கணக்கில் இருந்து ரூ.24 லட்சம் பணத்தை கொள்ளையர்கள் ஏடிஎம் இயந்திரங்கள் மூலம் எடுத்து மோசடி செய்துள்ளனர். இந்த அதிநவீன மோசடி தமிழகத்தில் நடந்து இருப்பது இது முதல்முறை என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் குற்றவாளிகளை பிடிக்க மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் வினோத் குமார் தலைமையிலான தனிப்படை செல்போன் சிக்னல் உதவியுடன் மேற்கு வங்கம் சென்று அம்மாநில போலீசார் உதவியுடன் மோசடியில் ஈடுபட்ட சயந்தன்முகர்ஜி (25), ராகுல் ராய் (24), ரோகன் அலிசனா (27), ராகேஷ் குமார் சிங் (33) ஆகிய 4 பேரை அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோசடிக்கு பயன்படுத்திய 105 சிம்கார்டுகள், 14 செல்போன்கள் 154 டெபிட் கார்டுகள், 22 போலி பான் கார்டுகள், 128 ஆதார் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடம் நடத்திய விசாரணையில், இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்டது உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த சதீஷ் என்பதும், மோசடியில் ஏடிஎம் இயந்திரத்தில் எடுக்கப்பட்ட ரூ.24 லட்சம் பணத்தை தாங்கள் எடுத்து சதீஷிடம் கொடுத்துவிட்டதாகவும், அதற்காக அவர் தங்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை மட்டும் கொடுத்ததாகவும் தெரிவித்தனர். இதுபோல தமிழகத்தில் வேறு எங்கேனும் மோசடி நடந்துள்ளதா என்று விசாரணை நடத்த கைது செய்யப்பட்ட 4 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். அதைதொடர்ந்து கைது செய்யப்பட்ட 4 பேரையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சென்னைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள இந்த மோசடி கும்பலின் தலைவன் சதீஷை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மருத்துவமனையின் வங்கி கணக்கோடு இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண்ணை துண்டித்து, அதே எண்ணில் புதிய ‘சிம்கார்டு’ பெற்றுள்ளனர்….