சென்னை: இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் தலைமையில் அனைத்து மண்டல ஆணையாளர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக சீராய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கோயில்களில் அசையும் அசையா சொத்துக்களைப் பற்றிய விவரங்கள் விவாதிக்கப்பட்டது. திருக்கோயிலுக்கு சொந்தமான 31000 ஏக்கர் நிலங்கள் இதுவரை அளக்கப்பட்டுள்ளது. கோயில்களில் வழங்கப்படும் பிரசாதங்கள் பக்தர்களுக்கு இணைய வழி மூலமாக பெறுவதற்கு அந்தந்த கோயில்களின் இணை ஆணையர்கள் விரைவில் பணிகளை தொடங்கவேண்டும். 47 முதுநிலை கோயில்களில் 17 திருக்கோயில்களில் ஆன்மிக புத்தக விற்பனை மையங்கள் உள்ளன, மேலும் 30 கோயில்களில் ஆன்மிக புத்தக விற்பனை மையங்கள் தொடங்குவதற்கான பணிகளை விரைந்து முடிக்க மண்டல இணை ஆணையாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.மேலும் ஆன்மிகப் புத்தகங்கள் விற்பனை மையத்தை அதிகரிக்கவும் இணையதளத்தில் ஆன்மிக, சமய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவேற்றம் செய்தல், கோயில்களின் முகப்பில் அக்கோயில்களின் வரலாறு புகைப்படங்கள் பக்தர்கள் பார்த்து பயனடையும் வகையில் விளக்கப்படங்கள் வைக்கப்படவேண்டும். 5 ஆண்டுகள் தொடர்ந்து பணிபுரிந்த தொகுப்பூதிய பணியாளர்களை பணி வரன் முறை செய்தல் போன்ற பணிகள் தாமதமின்றி செய்து தலைமையிடத்துக்கு அறிக்கை அனுப்பவேண்டும், கோயில் யானைகளை 15 நாட்களுக்கு ஒரு முறை மருத்துவர்களை கொண்டு மருத்துவபரிசோதனை செய்யவும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி உடல் நலத்தைப் பாதுகாக்க வேண்டும் எனஅனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது….