Sunday, June 2, 2024
Home » தமிழகத்தில் இருந்து வருவோருக்கு சிகிச்சை மறுப்பு கர்ப்பிணிகள், உறவினர்கள் திடீர் சாலை மறியல்

தமிழகத்தில் இருந்து வருவோருக்கு சிகிச்சை மறுப்பு கர்ப்பிணிகள், உறவினர்கள் திடீர் சாலை மறியல்

by Karthik Yash

புதுச்சேரி, ஜூலை 27: புதுச்சேரி எல்லைபிள்ளைச் சாவடியில் அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை உள்ளது. இங்கு புதுச்சேரியைச் சேர்ந்த கர்ப்பிணிகள், குழந்தைகள் மட்டுமின்றி தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான பெண்களும் பிரசவத்துக்காக வந்து செல்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக தமிழக பெண்களை பிரசவத்துக்கு அனுமதிப்பதில் மருத்துவமனை நிர்வாகம் சில வழிமுறைகளை பின்பற்றி வருகிறது. அதன்படி தொடர்ச்சியாக மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளும் பெண்கள் பிரசவத்துக்கு வரும்போது அனுமதிக்கப்படுகின்றனர்.

எந்தவித அட்டையும் போடாமல், தமிழகத்தில் இருந்து திடீரென கர்ப்பிணிகளை அழைத்துவரும் பட்சத்தில் பல்வேறு தகவல்களை கூறி உடன் வருபவர்களிடம் ஒப்புதல் கடிதம் எழுதி வாங்கியபிறகே சேர்த்து கொள்கின்றனர். இதனால் அவ்வப்போது மருத்துவமனை ஊழியர்களுக்கும், கர்ப்பிணிகள் மற்றும் உறவினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையே நேற்று அரசு மகளிர் மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு தமிழக பகுதிகளில் இருந்து வரும் கர்ப்பிணிகளை குறிப்பிட்ட ஒரு டாக்டர், தரக்குறைவாக நடத்துவதாகவும் உரிய மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளாமல் தங்களது மாநிலத்துக்கு செல்லுமாறு விரட்டியதாகவும் புகார் எழுந்தது. அதே நேரத்தில் கடலூர், விழுப்புரம், நெய்வேலி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அங்கு வந்திருந்த கர்ப்பிணிகளுக்கு அட்டை போட மறுத்ததாகவும் தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் திடீரென அங்கிருந்த உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி நாராயணனை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து 30க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் மற்றும் அவரது உறவினர்கள் மருத்துவமனை வெளியே பிரதான சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் எல்லைப்பிள்ளைச்சாவடி பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், உரிய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வதாக கூறியதையடுத்து உறவினர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

You may also like

Leave a Comment

seventeen − 14 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi