Sunday, May 19, 2024
Home » என்எல்சி விரிவாக்க பணிக்காக 1,088 நில உரிமையாளர்களுக்கு ₹75 கோடி இழப்பீடு

என்எல்சி விரிவாக்க பணிக்காக 1,088 நில உரிமையாளர்களுக்கு ₹75 கோடி இழப்பீடு

by Karthik Yash

கடலூர், ஜூலை 27: கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் கூறியுள்ளார். இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், வளையமாதேவி கீழ்பாதி, மேல்பாதி மற்றும் 4 கிராமங்களில் அமைந்துள்ள பரவனாற்றில் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் (என்எல்சி) பணிக்காக பரவனாறு மாற்று பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக என்எல்சி 6 கிராமங்களில் 46 தொகுதிகளில் 304 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 273 ஹெக்டேர் நிலங்கள் என்எல்சியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 30 ஹெக்டர் நிலங்கள் தீர்வாணை பிறப்பிக்கப்பட்டு, நில உரிமையாளர்கள் என்எல்சி இந்தியா நிறுவனத்திற்கு நிலங்களை ஒப்படைக்காமல் இருந்ததால் பணியை தொடர முடியாத நிலை ஏற்பட்டது.

தொடர்ந்து கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை, நில உரிமையாளர்களிடம் நடத்தப்பட்டது. அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், என்எல்சி அதிகாரிகள் தொடர் பேச்சு நடத்தி நில உரிமையாளர்களின் கோரிக்கைகள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 2006ம் ஆண்டு முதல் 2013 வரை கையகப்படுத்தப்பட்டுள்ள 104 ஹெக்டர் பரப்பளவுக்குள் வரும் 382 நில உரிமையாளர்களுக்கு ஏற்கனவே ஏக்கருக்கு ரூ.6 லட்சமாக வழங்கப்பட்டுள்ள இழப்பீட்டுத்தொகை நீங்கலாக, தற்போது ரூ.10 லட்சம் கருணைத்தொகை வழங்கப்படவுள்ளது.

அதேபோன்று 2006 முதல் 2013 வரை கையகப்படுத்தப்பட்டுள்ள 83 ஹெக்டர் பரப்பளவிற்குள் வரும் 405 நில உரிமையாளர்களுக்கு ஏக்கருக்கு 2.6 லட்சம் வழங்கப்பட்டுள்ள இழப்பீட்டுத்தொகை நீங்கலாக தற்போது ரூ.14 லட்சம் கருணைத்தொகை வழங்கப்படவுள்ளது. 2000 முதல் 2005ம் ஆண்டு வரை கையகப்படுத்தப்பட்டுள்ள 77 ஹெக்டர் பரப்பளவுக்குள் வரும் 301 நில உரிமையாளர்களுக்கு ஏற்கனவே ஏக்கருக்கு ரூ.2.4 லட்சமாக வழங்கப்பட்டுள்ள இழப்பீட்டுத்தொகை நீங்கலாக தற்போது ரூ.5 லட்சம் கருணைத்தொகை வழங்கப்படவுள்ளது. மொத்தமாக 1,088 நில உரிமையாளர்களுக்கு ரூ.75 கோடிக்கு மேற்பட்ட தொகை இழப்பீடாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அதன் விபரங்கள் நில உரிமையாளர்களுக்கு நேரில் அழைத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 15.08.2023 முதல் 26.08.2023 வரை 10 நாட்கள் நில உரிமையாளர்களிடம் ஆவணங்கள் பெற்று கருணைத்தொகை வழங்க சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

You may also like

Leave a Comment

19 − three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi