ராமேஸ்வரம்: தமிழகத்திலிருந்து படகில் கடத்தி செல்லப்பட்ட 2 டன் மஞ்சள், ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களை இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர். இலங்கை கடல் பகுதிக்குள் நேற்று அந்நாட்டு கடற்படையினர் ரோந்து கப்பலில் சோதனையில் ஈடுபட்டனர். அனலைத்தீவு கடல் பகுதியில் ரோந்து சென்றபோது, படகில் கடத்தி வரப்பட்ட 1,875 கிலோ மஞ்சள், 137 கிலோ ஏலக்காய், 134 கிருமிநாசினி பாட்டில்கள் ஆகியவற்றை கைப்பற்றினர். இதுதொடர்பாக தலைமன்னார் பகுதியை சேர்ந்த ஒருவரை கைது செய்த இலங்கை கடற்படையினர், மேல் நடவடிக்கைக்காக ஊர்காவல்துறை போலீசாரிடம ஒப்படைத்தனர். தற்போது இலங்கையில் அனைத்து பொருட்களின் விலையும் பன்மடங்கு அதிகரித்துள்ள நிலையில் பொருட்கள் பற்றாக்குறையினால் மக்கள் திண்டாடி வருகின்றனர். இதை பயன்படுத்தி தமிழகத்தில் இருந்து இலங்கை மக்களுக்கு தேவையான பொருட்களை படகில் கடத்தி செல்லும் போக்கு அதிகரித்துள்ளது.தமிழகத்தில் வழக்கத்தில் உள்ள விலைக்கு பொருட்களை வாங்கும் நபர்கள், இலங்கையில் பலமடங்கு கூடுதல் விலைக்கு ஏஜெண்டுகள் மூலம் விற்பனை செய்து கிடைக்கும் பணத்தில் தங்கக்கட்டிகளை படகில் தமிழகத்திற்கு கடத்தி வருகின்றனர். கடந்த வாரம் கடல் ரோந்து பணியில் மந்த நிலையில் இருந்த இலங்கை கடற்படையினர், தற்போது முன்புபோல் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது….