கரூர், நவ. 5: கரூர் மாநகராட்சி சார்பில் நடப்போம் நலம் பெறுவோம் எனும் பெயரில் 8 கி.மீ தூரம் கொண்ட சுகாதார நடைபாதை திட்டம் நேற்று கரூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமை தாங்கினார். மேயர் கவிதா கணேசன் கலந்துகொண்டு நடை பயணத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். தமிழ்நாட்டில் பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே தொற்றாநோய்கள் குறித்த காரணிகள், தொற்றா நோய்களை தடுப்பதற்கான வாழ்க்கை முறை மாற்றங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்பபடுத்தவும், ஏற்கனவே தொற்றா நோய் உள்ளவர்கள் உடல் நிலையை சீராக வைத்துக்கொள்ளவும் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தை நேற்று காலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சுற்றுலா மாளிகை நுழைவு வாயிலில் துவங்கி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வழியாக சென்று விளையாட்டு மைதானத்தில் 3 முறை நடைபயணம் மேற்கொண்டு மீண்டும் சுற்றுலா மாளிகை நுழைவு வாயில் வரை 8 கிமீ தூரம் நிறைவடைந்தது. மேலும், நடப்போம் நலம் பெறுவோம் மெகா நடைப் பயிற்சி நடைபெறும் நடைபாதையை ஒட்டி சிறப்பு மருத்துவக் குழு மற்றும் நடமாடும் மருத்துவக் குழுக்களின் மூலம் மருத்துவ முகாம்கள் நடைபெற்றது.
மருத்துவ முகாம்களில் ரத்த அழுத்த பரிசோதனை மற்றும் ரத்த சர்க்கரை அளவு பரிசோதனை செய்யப்பட்டது. எனவே, மக்கள், அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்கள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். எம்பி ஜோதிமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் குளித்தலை, மாணிக்கம், அரவக்குறிச்சி இளங்கோ, கிருஷ்ணாபுரம் சிவகாமசுந்தரி, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் துணை மேயர் தாரணி சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மண்டல தலைவர்கள் கனகராஜ், ஆர் .எஸ். ராஜா , சுகாதார அதிகாரி டாக்டர் லட்சியவர்ணா மாமன்ற உறுப்பினர்கள் வேலுச்சாமி, வைகோ பழனிச்சாமி ,இன்ஜினியர் மோகன்ராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.