தஞ்சாவூர், பிப்.26: தனியார் பள்ளிகளுக்காக தனி இயக்குநரகம் அமைத்து தந்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து சங்க கூட்டமைப்பின் மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தஞ்சையில் தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பின் 5வது மாநில மாநாடு நடைபெற்றது மாநிலத் தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மாநாட்டில், பள்ளி கட்டடங்களுக்கு டிடிசிபி மற்றும் எல்பிஏ அனுமதி பெறுவதில் இருந்து தளர்வு வழங்க வேண்டும். புதுப்பித்தல் ஆணை வழங்கும் நடைமுறையை மாற்ற வேண்டும் நிலுவையில் உள்ள ஆர்டிஇ கல்விக் கட்டண தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
வருங்காலங்களில் அந்தந்த கல்வி ஆண்டிலேயே இரண்டு தவணைகளாக இந்த தொகையை வழங்க வேண்டும். வாகனங்களுக்கான சட்டப்பிரிவில் சாலை விபத்து ஏற்பட்டால் அதனை ஓட்டும் ஓட்டுநர்களை முதல் குற்றவாளியாக சேர்க்காமல் தாளாளரை முதல் குற்றவாளியாக மாற்றக்கூடிய விதி இயற்கைக்கு முரணாக உள்ளதை மாற்றி, பள்ளி வாகன ஓட்டிகளுக்கும், தாளாளர்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
மருத்துவமனைகளின் பாதுகாப்பினை உறுதி செய்ய பாதுகாப்பு சட்டம் உள்ளதை போல தனியார் சுயநிதி பள்ளி தாளாளர்களை, பணியாளர்களை, பாதுகாக்க சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும், நீண்ட நாள் கோரிக்கையான தனியார் பள்ளிகளுக்காக தனி இயக்குநரகம் அமைத்து தந்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.