பெங்களூரு: பெங்களூருவில் வீட்டு வசதி திட்டத்தை செயல்படுத்த தனியார் நிறுவனத்திற்கு பெருநகர் வளர்ச்சி குழுமத்திற்கு சொந்தமான நிலத்தை வழங்கியதற்காக லஞ்சம் வாங்கிய புகாரில், கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது லோக்ஆயுக்தா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கர்நாடகா முதல்வராக எடியூரப்பா இருந்த போது, பெங்களூருவில் வீட்டு வசதி திட்டத்தை செயல்படுத்த, ராமலிங்கம் கட்டுமான நிறுவனத்திற்கு பெங்களூரு பெருநகர் வளர்ச்சி குழுமத்திற்கு சொந்தமான நிலத்தை வழங்கினார். இதற்காக அவர் லஞ்சம் பெற்றதாக சமூக ஆர்வலர் ஆப்ரகாம், பெங்களூருவில் உள்ள லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் புகார் கொடுத்தார். ஆனால், இது தள்ளுபடி செய்யப்பட்டது. அதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ஆப்ரகாம் மேல்முறையீடு செய்தார். அதை விசாரணை நடத்திய நீதிமன்றம், புகார் மீது விசாரணை நடத்தும்படி லோக் ஆயுக்தா நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, எடியூரப்பா மீது வழக்கு பதிவு செய்யும்படி போலீசாருக்கு 2 நாட்களுக்கு முன் லோக் ஆயுக்தா உத்தரவிட்டது. அதன்படி, எடியூரப்பா, அவரது மகன் விஜயேந்திரா, மாநில கூட்டுறவு துறை அமைச்சர் சோமசேகர், சசிதர்மரடி, சஞ்சய், சந்திரகாந்த், ராமலிங்கம் கட்டுமான நிறுவன உரிமையாளர் ராமலிங்கம் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். …