கம்பம், டிச. 2: கம்பத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற கடைக்காரருக்கு, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் கடைக்காரர்களுக்கு உணவு பாதுகாப்பு சட்டம் 2006 பிரிவு 58 மற்றும் 69ன் கீழ் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்நிலையில், தேனி மாவட்டத்தில் உள்ள சிறிய கடைகள் மற்றும் பெரிய கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் ராகவன் உத்தரவிட்டார். இதன்பேரில், கம்பம் உணவு பாதுகாப்பு அலுவலர் மணிமாறன் தலைமையில், கம்பம் தெற்கு மற்றும் வடக்கு போலீசார், நகரில் உள்ள செல்லாண்டியம்மன் கோவில் பகுதியில் கடைகளில் நேற்றுமுன்தினம் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ஒரு கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த கடைக்காரருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனையை கடைக்காரர்கள் தவிர்க்க வேண்டும். மீறினால் அபராதம் விதிக்கப்படும்’ என்றனர்.