இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மெல்ல உருவெடுத்து வருகிறது. கடந்த சில மாதங்களாக பரவல் குறைந்து வந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 29 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 188 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இதுவரை 2.35 லட்சம் பேர் வரை சிகிச்சை பெற்று வருகின்றனர். வட மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் தீவிரமடைகிறது. அம்மாநிலங்களில் இருந்து வணிகம், தொழில், ஆன்மிகம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்காக வந்து செல்பவர்கள் மூலம் தமிழகத்திலும் கொரோனா பரவல் தினசரி எண்ணிக்கை மீண்டும் ஆயிரத்தை நெருங்குகிறது. தமிழக சுகாதாரத்துறை கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கைகளில் காட்டி வந்த மந்தத்தன்மையே இதற்கு முக்கிய காரணமென எதிர்க்கட்சியினர், பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் தற்போது தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. முதல்கட்டமாக டாக்டர் உள்ளிட்ட மருத்துவப்பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், தீவிர நோய்த்தாக்கம் கொண்டவர்களுக்கு போடப்பட்டது. மத்திய சுகாதார அமைச்சர் அறிவுறுத்தலின்பேரில், தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தியாவில் மட்டும் இதுவரை மொத்தம் 3.50 கோடி பேர் வரை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். முதல் தடுப்பூசி போட்ட பின் 28வது நாளில், 2வது தடுப்பூசியை போட வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொண்ட ஒரு வாரம் முதல் ஒரு மாதம் வரை மதுபானங்களை தவிர்க்க வேண்டும். வலி நிவாரணி மாத்திரைகள், ஊசிகள் போட்டுக் கொள்ளக்கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். கடந்த 15ம் தேதி ஒரே நாளில் உலகம் முழுவதும் 83.40 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான இடங்களில் கோவிஷீல்டு தடுப்பூசிகளே போடப்படுகின்றன. கொரோனா தடுப்பூசிகளை பொறுத்தவரை ஒரு பாட்டிலில் உள்ள மருந்தை, 10 பேர் வரை போட்டுக் கொள்ளலாம். ஒருமுறை பயன்படுத்த துவங்கும்போது, அடுத்த 3 மணி நேரத்துக்குள் மீதமுள்ள மருந்துகளை பயன்படுத்தியே ஆக வேண்டும். அதற்கு மேல் மருந்தை பயன்படுத்தக்கூடாது. இந்திய அளவில் நாள்தோறும் 6 சதவீதத்துக்கும் மேலான ஊசி மருந்துகள் வீணாவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக பிரதமர் மோடியும் வருத்தம் தெரிவித்துள்ளனர். மாநில முதல்வர்களும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த போதிய விழிப்புணர்வு நடவடிக்கைகளை, மக்கள் பீதியடையா வண்ணம் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். இந்தியாவில் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு மக்களிடம் பரவலாக இல்லை. குறிப்பாக, தமிழக சுகாதாரத்துறை இந்த விஷயத்தில் இன்னும் மந்தமாக உள்ளது. மக்கள் முகக்கவசம் அணிகின்றனரா? தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்கின்றனரா என்பது குறித்து முறையாக கண்காணிக்கவில்லை. கொரோனா பரவலை கட்டுப்படுத்த உடனடியாக குழு அமைத்து வீடுகள்தோறும் சென்று, தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும். தெருக்கள்தோறும் தடுப்பூசி முகாம்களை அமைக்க வேண்டும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரத்தில், தடுப்பூசி போட வேண்டியதன் அவசியத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். மக்களும் இதனை உணர்ந்து, தடுப்பூசி போட்டுக் கொள்வது காலத்தின் கட்டாயம். …