திருப்பூர், மார்ச் 28: திருப்பூர் வீரபாண்டி அடுத்த ஜே.ஜே நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (27). இவர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவர் நேற்று காலை வேலைக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து புறப்பட்டார். வீரபாண்டி பிரிவு அருகே ஒருவழி பாதையில் அதிவேகமாக சென்றதாக கூறப்படுகிறது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையின் தடுப்புச்சுவரில் மோதியது. இதில் ராஜாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே ராஜா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பொதுமக்கள் வீரபாண்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வீரபாண்டி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.