சென்னை: தஞ்சை மாவட்டம், திருப்புவனத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் (42). இவர், அப்பகுதியில் பாத்திரக்கடை நடத்திவந்தார். பாமக பிரமுகர். இவர், மதமாற்றத்தை தட்டிக்கேட்டது தொடர்பான பிரச்சனையில் கடந்த 2019 பிப். 5ம் தேதி மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக முகமதுஅசாருதீன் (26), முகமது ரியாஸ் (27), நிஜாம் அலி (33), ஷர்புதீன் (60) உள்ளிட்ட 10பேரை திருவிடைமருதூர் போலீசார் கைதுசெய்தனர். பின்னர் இந்த வழக்கை தேசிய புலானாய்வு முகமை போலீசார் விசாரிக்கின்றனர். இதையடுத்து மேலும் 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மொத்தம் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கின் விசாரணை பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இந்தகொலை வழக்கில் தேடப்பட்ட தஞ்சாவூரை சேர்ந்த ரகுமான் சாதிக் என்பவரை என்.ஐ.ஏ. போலீசார் நேற்று முன்தினம் கைதுசெய்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ரகுமான் சாதிக்கை பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி வேல்முருகன் முன்பு நேற்று ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி ஆகஸ்ட் 17 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து ரகுமான் சாதிக்கை பூந்தமல்லியில் உள்ள தனி கிளைச் சிறையில் அடைத்தனர். இந்த கொலை வழக்கில் இதுவரை மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது….