தஞ்சை: தஞ்சையில் வட்டார போக்குவரத்து அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விடிய விடிய சோதனை நடத்தினர். இதில் 100 பவுன் நகை, ரூ.5.50 லட்சம் ரொக்கம் மற்றும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தனர். தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவர், புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலராக பணியாற்றி வருகிறார். இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் வந்தது. அதன்பேரில் தஞ்சை லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ராஜூ தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் நேற்றுமுன்தினம் காலை 7 மணிக்கு ஜெய்சங்கர் வீட்டுக்கு சென்றனர். வீட்டின் முன்புற இரும்பு கேட்டை பூட்டி விட்டு சோதனையை தொடங்கினர். இந்த சோதனை நேற்று அதிகாலை 3.30 மணி வரை நீடித்தது. சோதனையின்போது ஜெய்சங்கர் வீட்டிலிருந்து 100 பவுன் தங்க நகைகள் மற்றும் வைர நகைகள், ரூ.5.50 லட்சம் ெராக்கம், 5 காரின் ஆவணங்கள், இடம், வீடு, பண்ணை வீடு உள்ளிட்ட பல கோடி மதிப்புள்ள 20 பத்திர ஆவணங்கள், விலை உயர்ந்த செல்போன் ஆகியவை சிக்கியது. இவற்றை பெட்டிகளில் போலீசார் அள்ளிச்சென்றனர். இவற்றின் உண்மையான மதிப்பை கணக்கிடும் பணி நடந்து வருகிறது.இதுதொடர்பாக ஜெய்சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் முடிவில் தான் மற்ற விவரங்களை தெரிவிக்க முடியும் எனவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர். ஜெய்சங்கர் கும்பகோணம் வட்டார போக்குவரத்து அலுவலராக இதற்கு முன் பணியாற்றினார். கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் அவர் புதுக்கோட்டைக்கு மாறுதலானது குறிப்பிடத்தக்கது….