தஞ்சாவூர், ஏப்.11:தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் பயண சீட்டு எடுப்பதில் பயணிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே சரியான முறையில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என பயணிகள் தெரிவித்து வருகின்றனர்.
தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் ரூ.23 கோடியில் மேம்படுத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. பழைய கட்டிடங்களின் மேற்கூரைகள் அகற்றப்பட்டு வருகின்றன. திருச்சி ரயில்வே கோட்டத்தில் திருச்சிக்கு அடுத்தபடியாக அதிக வருமானம் தரும் ரயில் நிலையம் தஞ்சாவூர் ரயில் நிலையம் ஆகும். இந்த நிலையில் அம்ரிபாரத் திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ரயில் நிலையங்களில் நடை மேம்பாலம், கூடுதல் நடைமேடைகள், பயணிகள் காத்திருப்பு அறைகள், நுழைவு வாயில்கள் சீரமைப்பு, மின் தூக்கி, நகரும் படிக்கட்டுகள், மல்டி லெவல் பார்க்கிங் வசதி, கண்காணிப்பு கேமரா, வைபை உள்ளிட்ட நவீன வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது.
மேம்பாட்டு பணிகளையொட்டி தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்டர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு பலகை ரயில் நிலையத்தின் உள்ளே ஒரு சில இடங்களில் மட்டும் வைக்கப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் அறிவிப்பு பலகை இல்லாததால் பயண சீட்டு எடுக்க வரும் பயணிகள் டிக்கெட் கவுண்டர் எங்கு இருக்கிறது என்று தெரியாமல் தவிக்கின்றனர். அதற்குள் சம்மந்தப்பட்ட ரயில் நிலையத்திற்குள் வந்து கடந்து செல்லும் அவல நிலை இருந்து வருவதாக கூறப்படுகிறது. எனவே தஞ்சை ரயில் நிலையம் சார்பாக முக்கிய இடங்களில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.