தஞ்சாவூர், மார்ச் 9: தஞ்சாவூர் மேரீஸ்கார்னர் பாலத்தில் எரியாத மின்விளக்குகளால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். தஞ்சாவூரில் போக்குவரத்து மிகுந்த இடங்களில் மேரீஸ்கார்னர் பாலமும் ஒன்றாகும். இந்த பகுதியில் எந்த நேரமும் அனைத்து வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். புதிய பஸ் நிலையத்தில் இருந்து நாகை, திருவாரூர், காரைக்கால் போன்ற ஊர்களுக்கு செல்லும் அரசு பஸ்களும், தனியார் பஸ்களும் இந்த வழியாக தான் சென்று வருகின்றன.
இரவு நேரங்களில் இந்த பாலம் வழியாக இரு வழியிலும் வரும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இந் நிலையில் இந்த பாலத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட எல்.இ.டி மின்விளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால் இந்த பகுதிகள் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. திருடர்கள் இதை பயன்படுத்தி வழிப்பறியில் ஈடுபடும் வாய்ப்பு உள்ளது. எனவே, இதை மின்வாரியம் மின்விளக்குகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.