தஞ்சாவூர், ஏப்.14: தஞ்சாவூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இந்து சமய அறநிலையத்துறை அரண்மனை தேவஸ்தானம் சார்பில் 20.04.2024 அன்று நடைபெற உள்ள சித்திரை பெருவிழா பெரிய கோயில் திருத்தேரோட்ட விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தஞ்சை பெரிய கோயில் பெருவுடையார் திருக்கோயில் சித்திரை பெருவிழா திருத்தேரோட்ட விழாவிற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளையும், தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளையும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும், தேரோட்டம் நடைபெற உள்ள நான்கு ராஜ வீதிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும், பொதுமக்கள் பக்தர்கள் அதிகளவு வருகை எதிர் நோக்குவதால் கூடுதல் அரசுப் பேருந்து வசதிகள் செய்ய வேண்டும் எனவும், சாலைகள் சம தளமாக உள்ளதை உறுதி செய்ய வேண்டும் எனவும், தூய்மைப் பணியாளர்களை சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்த வேண்டும் எனவும் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்களும் விழா சிறப்பாக நடைபெற பணி மேற்கொள்ள வேண்டும் எனவும், பொதுமக்களுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி , வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஞானசேகரன் , உதவி ஆணையர் கவிதா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.