தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே கோயில் பூட்ைட உடைத்து உண்டியலை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாரியம்மன் கோயில் அருகே புலவர் நத்தம் கிருஷ்ணாபுரத்தில் சர்வ சித்தி விநாயகர் கோயில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வர். நேற்று முன் தினம் தரிசனம் முடிந்து கோயில் பூட்டப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை கோயிலுக்கு வந்த பக்தர்கள் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் கோயில் உள்ளே சென்று பார்த்த போது உண்டியல் காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அம்மாபேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரித்தனர். உண்டியல் கடந்த ஓராண்டாக எண்ணப்படாமல் இருந்ததால் அதில் பல ஆயிரம் பணம் இருக்கும் என தெரிகிறது. இது குறித்த புகாரின் பேரில், உண்டியல் பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.