தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பெய்த தொடர் மழையில், 4வது மாடி சிமென்ட் சிலாப் பெயர்ந்து விழுந்ததில் ஓய்வு நடத்துனர் பலத்த காயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தஞ்சாவூர் கீழவாசல் பிள்ளையார் கோயில் வார்க்கார போஸ் நாடார் காலணியில் வசித்து வருபவர் பக்கிரிசாமி (64). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். நேற்று காலை வசித்து வரும் குடியிருப்புக்குள் உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்துள்ளார்.
நான்கு அடுக்கு மாடிகளை கொண்ட குடியிருப்பின் நான்காவது மாடியின் சிமென்ட் சிலாப்பெயர்ந்து தண்ணீர் பிடித்து கொண்டு இருந்த பக்கிரிசாமி மீது விழுந்தது. இதில் இடிப்பாடுகளில் சிக்கி பலத்த காயத்துடன் இருந்த பக்கிரிசாமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து பக்கிரிசாமி மைத்துனர் காளிதாஸ் அளித்த புகாரின் பேரில் கிழக்கு காவல்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.