தஞ்சாவூர், மார்ச் 3: தஞ்சாவூர் அரசர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாமில் 65 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. தஞ்சாவூர் அரண்மனை வளாக அரசர் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து நடத்தும் மாற்றுத் திறனாளிகளுக்கான மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது. கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்தார்.
பின்னர் கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்ததாவது: தஞ்சாவூர் அரண்மனை வளாகம், அரசர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த மாற்றுத் திறனாளிகளுக்கான மாபெரும் சிறப்பு மருத்துவ முகாமில் மருத்துவத் துறை, ஊரக வளர்ச்சி துறை, வருவாய் துறை, வேலைவாய்ப்பு துறை, மத்திய கூட்டுறவு வங்கரி மாவட்ட தொழில் மையம், ஆவின், ஊரக வாழ்வாதார இயக்கம் முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டம். தாட்கோ, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, முன்னோடி வங்கி மற்றும் பள்ளி கல்வித்துறை ஆகிய துறைகளை ஒருங்கிணைத்து நடைபெற்றது.
இம்முகாமில் 150க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டு UDID அட்டை, உதவி உபகரணங்கள், வங்கி கடன், இதர துறை சார்ந்த நலத்திட்ட உதவிகள், தமிழ்நாடு உரிமைகள் திட்டம் தொடர்பான மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பில் பதிவு செய்யாதவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். என்றார்.
முகாமில் மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட ஒரு சிறப்பு குழந்தைக்கு, மூளை முடக்குவாத சிறப்பு சக்கர நாற்காலி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை 65 பேருக்கு கலெக்டர் வழங்கினார். இம்முகாமில் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரன், மாவட்ட ஊராட்சித் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சங்கர், மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர் சீனிவாசன் மற்றும் அனைத்து அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.