தஞ்சாவூா், மார்ச் 4: தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வழிகாட்டுதலில் மாதம் தோறும் நடத்தப்பட்டு வரும் பாரம்பரிய நடைப்பயணத்தின் தொடர்ச்சியாக நேற்று கைவினைப்பொருள் பாரம்பரிய நடைபயணம் தஞ்சாவூர் சிவகங்கை பூங்கா வீணை தயாரிப்பு கூட்டுறவு சங்கத்திலிருந்து மேற்கொள்ளப்பட்டது.
தஞ்சாவூர் நாணயக்கார செட்டி தெருவில் வசிக்கும் தஞ்சாவூர் கலைத்தட்டு கலைஞர் செல்வராஜ், ஜவுளி செட்டி தெரு தஞ்சாவூர் அலங்கார தேர் கலைஞர் செந்தில்குமார், தெற்குவீதி கண்ணாடி கலைப்பொருட்கள் கலைஞர் செல்வராஜ், காசு கடை தெரு பொற்கொல்லர்கள், மானோஜிப்பா வீதியில் வசிக்கும் நகை அச்சு கலைஞர் சீனிவாசன், கீழ வீதி தஞ்சாவூர் ஓவிய கலைஞர் சம்பாஜி ராஜா போன்சிலே மற்றும் வீணை தயாரிப்பு கலைஞர் சின்னப்பா ஆகியோர் இல்லங்களுக்கு நேரடியாக சென்று கலைப் பொருட்கள் தயாரிப்பு முறைகள் குறித்து விரிவாக எடுத்துக் கூறப்பட்டது.
பாரம்பரிய நடை பயணத்தை தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலக மேனாள் காப்பாளர் முனைவர். பெருமாள் வழி நடத்தினார். இதில் தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழும ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார், உதவி சுற்றுலா அலுவலர் வரதராஜன், இன்டாக் பாரம்பரிய சங்க ஒருங்கிணைப்பாளர் சுவாமிநாதன், கலை ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.