சாத்தான்குளம்: மனைவியுடன் சேர்ந்து வாழ மறுத்த கார் டிரைவருக்கு வாட்ஸ்அப்பில் கொலைமிரட்டல் விடுத்த மனைவியின் சகோதரரான நெல்லை வாலிபரை போலீசார் கைது செய்த னர். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வடக்கு ரத வீதியைச் சேர்ந்த தியாகராஜனின் மகன் பிச்சைக்கண்ணு (44). கார் டிரைவரான இவருக்கும், நெல்லை தாழையூத்து பள்ளிக்கூடம் தெருவைச் சேர்ந்த குருசாமியின் மகள் ராமலட்சுமி என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுக்கு முன்னர் திருமணம் நடந்தது. பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தம்பதியினர் பிரிந்து வாழ்கின்றனர். மேலும் இதுதொடர்பான வழக்கு ராதாபுரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இதனால் பிச்சைக்கண்ணுவின் மீது ஆத்திரத்தில் இருந்து வந்த ராமலட்சுமியின் சகோதரரான ஆறுமுகராஜ் (32) என்பவர், கடந்த ஜூன் 6ம்தேதி அன்று பிச்சைக்கண்ணுவின் வாட்ஸ்அப் எண்ணில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது தனது சகோதரியுடன் முறையாக சேர்ந்து வாழவேண்டும்; இல்லையென்றால் நடப்பதே வேறு என கொலை மிரட்டல் விடுத்து பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பிச்சைக்கண்ணு இதுகுறித்து நெல்லை எஸ்.பி. சிலம்பரசனிடம் புகார் அளித்தார். இதையடுத்து இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு எஸ்.பி. உத்தரவிட்டார். அதன்பேரில் சாத்தான்குளம் எஸ்.ஐ. சுரேஷ்குமார் வழக்குப்பதிந்த நிலையில் விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் முத்து, வாட்ஸ்அப்பில் கொலைமிரட்டல் விடுத்த ஆறுமுகராஜை நேற்று முன்தினம் கைது செய்தார்.