வேடசந்தூர், ஜூன் 20: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள வெள்ளம்பட்டி ஏடி காலனியை சேர்ந்தவர் முனியாண்டி (45). கூலி தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு அரிசி வாங்குவதற்காக புதுரோட்டிற்கு சென்று மளிகை கடையில் அரிசி வாங்கிவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது புதுரோடை நோக்கி பள்ளிக்கூடத்தானூரைச் சேர்ந்த அப்பாகாளை ( 50). என்பவர் டூவீலரில் வந்துகொண்டிருந்தார்.
இந்த இரண்டு டூவீலரும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் முனியாண்டி சம்பவ இடத்திலேயே தலையில் பலத்த காயம் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். அப்பாகாளைக்கு கால் முறிவு ஏற்பட்டது. இச்சம்பவத்தை பார்த்த அக்கம் பக்கத்தினர் விபத்தில் காயமடைந்தவரை மீட்டு முதல் உதவி சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து எரியோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.