காரிமங்கலம், பிப்.7: காரிமங்கலம் அருகே டூவீலர் மீது கார் மோதிய விபத்தில், கணவன் கண்ணெதிரே மனைவி பரிதாபமாக உயிரிழந்தார். காரிமங்கலம் அடுத்த கெங்குசெட்டிப்பட்டியைச் சேர்ந்தவர் கோவிந்தன்(49). இவரது மனைவி முருகம்மாள்(43). இவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். கோவிந்தன் தனது மனைவியுடன், தர்மபுரி அருகே உள்ள குலதெய்வ கோயிலுக்கு சென்று விட்டு, டூவீலரில் கிருஷ்ணகிரி பைபாஸ் ரோட்டில் சென்றுள்ளார்.
மாட்லாம்பட்டி அருகே உள்ள பெட்ரோல் பங்க் முன் சென்ற போது, பின்னால் வேகமாக வந்த கார், டூவீலர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த முருகம்மாள், கணவன் கண்ணெதிரிலேயே உயிரழந்தார். மேலும், படுகாயம் அடைந்த கோவிந்தனை அக்கம்பக்கத்தினர் மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.