கமுதி, மே 10: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை மற்றும் சுற்றியுள்ள 60 பேர் பஸ்ஸில்முதுகுளத்தூர் அருகே இளஞ்செம்பூர் கிராமத்தில் உள்ள நிறைகுளத்து அய்யனார் கோவிலுக்கு வந்தனர். சாமி கும்பிட்டு விட்டு நேற்று இரவு மானாமதுரை திரும்பும் போது கமுதி அருகே அபிராமம் முத்தாதிபுரம் கிராமம் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த பஸ் டிரான்ஸ்பார்மர் மீது மோதியது. இதில் பேருந்தில் இருந்த 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
டிரான்ஸ்பார்மர் மீது மோதிய வேகத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் மிகப் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. உடனடியாக கமுதி அபிராமம் உள்ளிட்ட ஊர்களில் இருந்து 108 வாகனம், கமுதி தீயணைப்பு வாகனம் மற்றும் அபிராமம் போலீசார் விபத்து நடந்த இடத்திற்கு வந்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு கமுதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அபிராமம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.