ஜெயங்கொண்டம், பிப்.8: அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சி அருகே அழகிய மணவாளன் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மகன் பாக்கியராஜ்(40).இவர் உடையார்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரசு மருத்துவ உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலை கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன்,மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை ஏற்பட்டு மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 5ம் தேதி உடையார்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பணிக்கு வந்த பாக்கியராஜ் திடீரென கையில் வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். தொடர்ந்து ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாக்கியராஜ், பின்னர் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பொன்.பாக்கியராஜ் உயிரிழந்தார். இது குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.