ராமேஸ்வரம், ஜன.8: ராமேஸ்வரம் சல்லிமலை கச்சக்குளம் பகுதி முதல் காட்டுப்பிள்ளையார் கோயில் பகுதி வரை செல்லும் சிமென்ட் சாலை ஜல்லிக்கற்களாக மாறியதால் வாகனங்களின் டயர்கள் சேதமடைகிறது. நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் நகராட்சி சல்லிமலை பகுதியில் கச்சக்குளம் அமைந்துள்ளது. இக்குளத்தின் அருகில் இருந்து மேற்கு நோக்கி காட்டுப்பிள்ளையார் கோயில் பகுதி வரை சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
மூன்று ஆண்டுக்கு முன்பு அதிமுக ஆட்சியில் பல லட்சம் செலவில் சுமார் ஒரு கி.மீ தூரம் அமைக்கப்பட்ட கான்கிரீட் சாலை தற்போது சேதமடைந்து ஜல்லிகற்களாக காட்சியளிக்கிறது. முறையான சிமெண்ட் கலவை போடாமல் தரமில்லாமல் அமைக்கப்பட்ட இந்த சாலை தற்போது ஜல்லிகற்களை பரசி விட்டது விட்டது போல் காணப்படுகிறது. மேலும் கான்கிரீட் சாலைக்கு பயன்படுத்தப்பட்ட கம்பிகள் அனைத்தும் பெயர்ந்து தனியாக ஆங்காங்கே வெளியே நிற்கிறது.
சிமெண்ட் கலவைக்கு பதில் களிமண் கலவை பயன்படுத்தி அமைக்கப்பட்ட சாலை போல் உள்ளது. ராமேஸ்வரம் திட்டக்குடி நான்கு முனை சந்திப்பில் இருந்து பேருந்து நிலையம் செல்லும் பிரதான தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெருக்கடியாக இருக்கும் போது ஆட்டோ, இருசக்கர வாகனத்தில் செல்லும் நபர்கள் இவ்வழியை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். மேலும் சுற்றுலா வாகனங்களும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால் இந்த சேதமடைந்த சாலையில் செல்லும் வாகனங்கள் ஜல்லி கற்களில் செல்லும் போது டயர் பஞ்சராவது வழக்கமாக உள்ளது. இதனால் இப்பகுதி மக்களுக்கு சுற்றுச் சாலை போல் பயன்பட்டு வந்த இச்சாலை தற்போது வாகனங்களுக்கு பிரச்னையாக மாறியுள்ளது. ஆகையால் சேதமடைந்த இந்த சாலையை அகற்றி முழுவதுமாக தார்ச்சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.