சேலம், மார்ச் 23:சேலம்-கரூர் ரயில் இருமார்க்கத்திலும் வரும் 30ம் தேதி வரை 1 மணி நேரம் தாமதமாக இயக்கப்படும் என சேலம் கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட மல்லூர் ரயில்வே ஸ்டேஷன் யார்டு பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால், இவ்வழியே இயங்கும் சில ரயில்களின் இயக்கத்தில் சேலம் கோட்ட நிர்வாகம் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தவகையில், சேலம்-கரூர் ரயில் (06837) இன்று (23ம் தேதி) முதல் வரும் 30ம் தேதி வரை 1 மணி நேரம் தாமதமாக இயக்கப்படுகிறது. சேலம் ஜங்ஷனில் மாலை 6 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக இரவு 7 மணிக்கு புறப்பட்டுச் செல்கிறது. இதேபோல், மறுமார்க்கத்தில் கரூர்-சேலம் ரயில் (06838) இன்று முதல் வரும் 30ம் தேதி வரை 1.10 மணி நேரம் தாமதமாக இயக்கப்படுகிறது. கரூரில் இரவு 7.55 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக இரவு 9.05 மணிக்கு புறப்பட்டு சேலம் நோக்கி இயக்கப்படுகிறது. இத்தகவலை சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.