Monday, June 17, 2024
Home » சேலத்தில் சிலிண்டர் வெடித்து 4 வீடுகள் இடிந்து தரைமட்டம்

சேலத்தில் சிலிண்டர் வெடித்து 4 வீடுகள் இடிந்து தரைமட்டம்

by kannappan

சேலம்: சேலத்தில் இன்று காலை காஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் 4வீடுகள் இடிந்து தரைமட்டமானது. தீயில் கருகிய மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 15பேர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சேலம் கருங்கல்பட்டி பாண்டுரங்கவிட்டல் 3வது தெருவை சேர்ந்தவர் வெங்கட்ராஜன்(62). இவரது வீட்டில் கோபி, கணேசன், முருகன் ஆகியோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இதில் கோபியுடன் அவரது தாயார் ராஜலட்சுமி, உறவினர் எண்ணம்மாள் ஆகியோரும், கணேசன் வீட்டில் தாயார் அம்சவேணி, மனைவி லட்சுமி, மகன்கள் ஷாம், சுதர்சன் ஆகியோரும், முருகன் வீட்டில் மனைவி உஷாராணி, மகன் கார்த்திக்ராம், மகள் பூஜா ஆகியோரும் வசித்து வருகின்றனர். இவர்களது வீட்டிற்கு அருகிலேயே சேலம் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் பத்மநாபன் (48) சொந்தவீடு கட்டி மனைவி தேவி, மகன் லோகேஷ் ஆகியோருடன் வசித்து வருகிறார்.இந்நிலையில் இன்று காலை 6.30 மணிக்கு கோபியின் வீட்டில் அவரது தாயார் ராஜலட்சுமி, காபி போடுவதற்காக கேஸ் அடுப்பை பற்ற வைத்ததாக கூறப்படுகிறது. அப்போது சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் 4 வீடுகளும் இடிந்து தரைமட்டமானது. வெடிகுண்டு வெடித்தது போல் பயங்கர சத்தம் கேட்டதால் அதிர்ச்சியில் உறைந்த அப்பகுதி மக்கள், அனைவரும் தெருவுக்கு ஓடி வந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களின் அலறல் சத்தம் கேட்டு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் வேலு தலைமையில் 40க்கும் மேற்பட்ட வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோல் மாநகர போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசாரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.இதில் தீயில் கருகி படுகாயத்துடன் போராடிக் கொண்டிருந்த கோபியை (52) மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ராஜலட்சுமி (80), கணேசன்(37), அவரது மகன் சுதர்ஷன்(6), வீட்டு உரிமையாளர் வெங்கட்ராஜன் (62), அவரது மனைவி இந்திராணி (54), உறவினர்கள் மோகன்ராஜ்(40), நாகசுதா (30), மற்றும் கோபால்(70), தனலட்சுமி (64), முருகன் மனைவி உஷாராணி (40), மகன் லோகேஷ்(18) என்று 12 பேரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் உடல் கருகிய நிலையில் கோபியின் தாயார் ராஜலட்சுமி (80) உயிரிழந்தார். கோபி 90 சதவீத தீக்காயத்துடன் தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்தில் சம்பவம் நடந்த இடத்திற்கு 50 மீட்டர் தூரத்திலுள்ள வீட்டில் கோலம் போட்டுக் கொண்டிருந்த தனலட்சுமி (40) என்பவரும் படுகாயமடைந்தார். 4 வீடுகளும் தரைமட்டமானதில் இடிபாடுகளில் சிக்கிய தீயணைப்பு சிறப்பு உதவி அலுவலர் பத்மநாபன், இவரின் மனைவி தேவி ஆகியோரை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம், மாநகராட்சி கமிஷனர் கிறிஸ்துராஜ், மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்முல்கோடா, வடக்கு தொகுதி எம்எல்ஏ ராஜேந்திரன், தெற்கு தொகுதி எம்எல்ஏ பாலசுப்ரமணியன் ஆகியோர் சென்று பார்வையிட்டு மீட்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. விபத்திற்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர்….

You may also like

Leave a Comment

13 − 7 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi