சங்ககிரி: சேலத்திலிருந்து ஈரோடு சென்ற தனியார் பஸ், சங்ககிரி அருகே பள்ளத்தில் கவிழ்ந்ததில், 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 40க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். சேலத்தில் இருந்து ஈரோட்டுக்கு தனியார் பஸ் நேற்று மதியம் 1 மணியளவில் புறப்பட்டு சென்றது. பஸ்சை சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் பகுதியைச் சேர்ந்த வெற்றிவேல் (41) என்பவர், ஓட்டிச் சென்றார். மதியம் 1.30 மணிக்கு சங்ககிரி புதிய பஸ் நிலையம் அருகே, அக்கமாபேட்டை என்ற இடத்தில் பஸ் சென்றபோது. எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் உள்ள தென்னை மரத்தில் மோதி, 10அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. 40க்கும் மேற்பட்ட பயணிகள் பஸ்சில் இருந்தனர். அவர்கள் படுகாயம் அடைந்து அலறினர். சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள், போலீசார் மற்றும் தீயணைப்புத்துறை, ஆம்புலன்சுக்கு தகவல் அளித்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை மீட்டு, சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அவ்வழியே வந்த வாகனங்களில் அனுப்பி வைத்தனர்.இந்த விபத்தில், சங்ககிரியைச் சேர்ந்த திருமணத்திற்கு மேளம் வாசிக்கும் கணேசன்(71) படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், படுகாயமடைந்த 40க்கும் மேற்பட்டோர் சேலம், ஈரோடு, திருச்செங்கோடு, கோவை உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்துக்குள்ளான பஸ்சை 2 பொக்லைன்கள் மூலம் மீட்டு போலீசார் அப்புறப்படுத்தினர். இதனிடையே, படுகாயத்துடன் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது….