ஊட்டி: ஊட்டி அருகேயுள்ள பட்பயர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள், அரசு அலுவலகங்கள் புதிதாக துவக்கப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரியும் உள்ளது. இப்பகுதி மக்களின் பிரதான சாலையாக இச்சாலை உள்ளது. இந்நிலையில், மருத்துவக்கல்லூரி கட்டுமான பணிகளில் ஈடுபட்டுள்ள டிப்பர் லாரிகள் இச்சாலையிலேயே கடந்த 2 ஆண்டுகளாக சென்று வரும் நிலையில், இச்சாலை மிகவும் பழுதடைந்துள்ளது. பெரும்பாலான இடங்களில் சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டு மழை நீர் தேங்கி நிற்கிறது. மேலும், சாலையும் சேறும் சகதியுமாக மாறியுள்ளது. இதனால், பட்பயர் பகுதிக்கு செல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இது குறித்து ஊட்டி நகராட்சி 2வது வார்டு கவுன்சிலர் நாகமணி கமிஷனரிடம் அளித்த கோரிக்கை மனுவில், ‘‘ஊட்டி 2வது வார்டிற்குட்பட்ட பட்பயர் பகுதியில் உள்ள சாலை மிகவும் பழுதடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. சாலை சேறும், சதியுமாக மாறியுள்ளதால் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இச்சாலையை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கூறியுள்ளார்….