பந்தலூர், ஜன.22: பந்தலூர் அருகே சேரம்பாடி அரசு நடுநிலைப்பள்ளிக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் மாணவ-மாணவிகள் பாதிப்பு அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட சேரம்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளிக்கு செல்லும் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.
இதனால் அவசர தேவைகளுக்கு ஆட்டோ உள்ளிட்ட எந்தவித வாகனங்களும் செல்ல முடியாமல் இருந்து வருகிறது. இதையடுத்து பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்து எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் பழுதடைந்த சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.