வானூர், நவ. 4:வானூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சேமங்கலம் ஊராட்சியில் தலைவராக தசரதன் என்பவர் உள்ளார். துணைத்தலைவராக ரம்யா என்பவர் இருந்து வருகிறார். இந்த ஊராட்சியில் அத்தியாவசிய பணிகளான குடிநீர், மின் விளக்குகள் மற்றும் சாலை பராமரிப்பு பணிகளுக்கான தொகையை விடுவிக்க ஊராட்சி துணைத்தலைவர் ஒத்துழைப்பு வழங்காமல் இருந்து வந்தார். இதுகுறித்து ஊராட்சி தலைவர் தசரதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன்படி ஊராட்சி தலைவரால் அளிக்கப்பட்ட மனு மீது ஆட்சியர் அலுவலக ஊராட்சிகளின் ஆய்வாளர் 6 வாரங்களுக்குள் சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஆணையிடப்பட்டது. அதனை தொடர்ந்து 11.09.2023 அன்று மாவட்ட ஆட்சியரால் ஊராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர் ஆகியோரிடம் நேரடியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதில் ஊராட்சிக்கு துணைத்தலைவர் ஒத்துழைப்பு வழங்காதது தெரியவந்ததால் அவர் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 203ன்படி சேமங்கலம் ஊராட்சியின் வங்கி கணக்குகளின் காசோலைகளில் ஊராட்சி துணைத்தலைவரின் அதிகாரம் ரத்து செய்யப்பட்டது. மேலும் வங்கி கணக்குகளின் காசோலைகளில் கையொப்பமிடும் அதிகாரத்தை சம்பந்தப்பட்ட மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது. இதனால் ஊராட்சியில் 2 ஆண்டுகளாக இருந்து வந்த பிரச்னை முடிவுக்கு வந்தது.