சேத்தியாத்தோப்பு, செப். 11: சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பெரியகுப்பம் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடி கம்பம் சேதப்படுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பெரியக்குப்பம் பேருந்து நிறுத்தம் அருகில் மெயின்ரோட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடிகம்பம் இருந்து வந்தது. நேற்றுமுன்தினம் இரவு இந்த கொடி கம்பத்தை அறுத்தும், கொடியை கிழித்தும் மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.
நேற்று காலை இதையறிந்த பெரியக்குப்பம் கிராம மக்கள் விருத்தாசலம், சேத்தியாத்தோப்பு சாலையில் அமர்ந்து கொடி கம்பத்தை சேதப்படுத்தியவர்களை உடனே கைது செய்ய வேண்டுமென்றும், இந்த சம்பவம் தொடர்ந்து இந்த இடத்தில் 3வது முறையாக நடந்திருக்கிறது என்று கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இதனால் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.