திருமங்கலம், செப்.20: மதுரை தெற்கு மாவட்ட திமுக சார்பில் திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா மற்றும் முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையாவின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியில் இளைஞரணி செயலாளர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார். மதுரை தெற்கு மாவட்டம் திருமங்கலம் தொகுதி முத்தப்பன்பட்டி சேடபட்டியார் திடலில் நாளை முன்னாள் சபாநாயகரும், தேர்தல் பணிக்குழு செயலாளருமான சேடபட்டி இரா.முத்தையாவின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியும், தொடர்ந்து திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழாவும் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிக்கு மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் சேடபட்டி மு.மணிமாறன் தலைமை வகிக்க, மதுரை வடக்கு மாவட்ட செயலாளர், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்எல்ஏ முன்னிலை வகிக்கிறார்கள். விழாவில் இளைஞரணி செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கி கவுரவித்து உரையாற்ற உள்ளார்.