மாமல்லபுரம்: மாமல்லபுரம் பேரூராட்சியில் சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக திடக்கழிவு மேலாண்மை குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவிற்கு, தலைவராக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத், ஆலோசனை குழு உறுப்பினராக செங்கல்பட்டு சார் ஆட்சியர் சஜ்ஜீவனா ஆகியோர் செயல்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று திடக்கழிவு மேலாண்மை குழு சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, செங்கல்பட்டு சார் ஆட்சியர் சஜ்ஜீவனா தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்.வந்த்ராவ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக 188 நாடுகளை சேர்ந்த 2,500க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் வருகின்றனர். அதனால், மாமல்லபுரம் பேரூராட்சியை குப்பைகள் இல்லாமல் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். சாலையோரங்களில், குப்பைகளை கொட்டக்கூடாது. குப்பை தொட்டிகளில் மட்டுமே கொட்ட வேண்டும். தூய்மை, பணியாளர் தெரு தெருவாக சென்று குப்பைகள் இருந்தால் அகற்ற வேண்டும். குப்பைகளை கண்ட இடங்களில் கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த, குழுவில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர், டிஎஸ்பி, பேரூராட்சி செயல் அலுவலர், மாசு கட்டுப்பாட்டு வாரி பொறியாளர், தன்னார்வலர்கள் பலர் இடம் பெற்றுள்ளனர்….