கோவை, பிப். 20: கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடியிடம், மாநகராட்சி 26-வது வார்டு கவுன்சிலர் சித்ரா வெள்ளிங்கிரி (மதிமுக) நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கோவை பீளமேடு 26-வது வார்டுக்கு உட்பட்ட முருகன் நகர், ஸ்ரீராம் நகர், நேதாஜி நகர், ஹட்கோ காலனி போன்ற பகுதிகள் இந்திய உணவுக்கிடங்கிற்கு அருகாமையில் உள்ளது. இந்த கிடங்கில் இருந்து கடந்த 15 நாட்களாக செல் பூச்சிகள் பெருமளவு வெளிவருகிறது. இந்த பூச்சிகள், வீடுகளுக்குள் படையெடுக்கிறது.
உணவு, படுக்கை விரிப்பு, ஷோபா உள்ளிட்ட எல்லா இடங்களிலும் கொத்து கொத்தாக பரவுகிறது. உணவில் அதிகளவு இந்த பூச்சிகள் கலந்துவிடுவதால், அவற்றையும் சேர்த்து உட்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது. இது, உடல் உபாதைகளை ஏற்படுத்துகிறது. எனவே, விரைந்து செயல்பட்டு, இந்த பூச்சி பரவலை தடுக்க வேண்டும். அத்துடன், இந்திய உணவுக்கிடங்கை பொதுமக்கள் வசிக்காத வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்ய வேண்டுகிறோம். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.