திருப்பூர், பிப்.11: திருப்பூர் மாவட்டம் காமநாயக்கன்பாளையம் கே.கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் நேசபிரபு (29). இவர் தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 24ம் தேதி இரவு பல்லடம்-பொள்ளாச்சி சாலையில் உள்ள கே.கிருஷ்ணாபுரம் பிரிவு பகுதியில் மர்ம நபர்களால் வெட்டப்பட்டார்.
இதில் படுகாயம் அடைந்த அவர் மீட்கப்பட்டு கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முன் விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும், குற்றவாளிகளை கைது செய்ய 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்த சம்பவத்தில் தொடர்புடைய பிரவீன் (27), சரவணன் (23), ஜெயப்பிரவின் (22), ஹரிகரன் (23), பாலபாரதி (25), மதன் (25), முகமது உமர் (25), கருப்புசாமி (20), அப்துல் சலாம் (25), புல்லட் மணி (26), விக்கி என்ற சோமசுந்தரம் (27) ஆகிய 11 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய கிருபாகரன் (26) என்பவர் கோவை ஜேம்எம் 7ல் சரணடைந்தார். இதில், தொடர்புடைய 12 பேரில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ஒருவர் கோர்ட்டில் சரணடைந்துள்ளார். மேலும் ஒருவரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.