செம்பனார்கோயில், ஏப்.4: மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் அருகே ஆக்கூரில் வாள்நெடுங்கண்ணி அம்மன் உடனாகிய பிரசித்தி பெற்ற தான்தோன்றீஸ்வரர் கோயிலில் நேற்று சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி நந்தி பகவானுக்கு பால், தேன், இளநீர், தயிர், பன்னீர், மஞ்சள்பொடி, திரவியபொடி, பஞ்சாமிர்தம், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. முன்னதாக தான்தோன்றீஸ்வரர், வாள்நெடுங்கண்ணி அம்மன் ஆகிய சாமிகளுக்கும் சிறப்பு அலங்காரம் செய்து மகாதீபாராதனை நடைபெற்றது.
இதேபோல் செம்பனார்கோயில் அருகே விளநகர் கிராமத்தில் உள்ள துறைகாட்டும் வள்ளலார் கோயில், செம்பனார்கோயில் சுவர்ணபுரீஸ்வரர் கோயில், கீழிருப்பு சிதம்பரேஸ்வரர் கோயில், பரசலூர் வீரட்டேஸ்வரர் கோயில், தலைச்சங்காடு சங்காரண்யேஸ்வரர் கோயில், முடிகண்டநல்லூர் குழம்பீஸ்வரர் கோயில், பொன்செய் நற்றுணைஈஸ்வரர் கோயில், கீழையூர் கடைமுடிநாதர் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் சோமவார பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில் சுற்றுப்பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.