சென்னை: ராஜராஜசோழனின் வரலாறு இடம்பெற்ற இடங்களை காண்பதற்கு சென்னையில் தொடங்கி தஞ்சாவூர் வரை ‘பொன்னியின் செல்வன்’ என்ற பெயரில் சுற்றுலா செல்ல தமிழ்நாடு சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்துள்ளது. சோழர்களின் வரலாற்று கதைகளில் ஒன்றுதான் பொன்னியின் செல்வன். தஞ்சையை ஆண்ட ராஜராஜசோழன், அவரின் அண்ணன் ஆதித்த கரிகாலன், குந்தவை பிராட்டி ஆகியோரின் வாழ்க்கை பயணம் பற்றி ‘பொன்னியின் செல்வன்’ கதை விளக்குகிறது. போருக்கு சென்ற ஆதித்த கரிகாலன், தனது தந்தையான சுந்தர சோழன் மற்றும் தங்கையான குந்தவைக்கும் ஓலை மூலம் செய்தி அனுப்புகிறான். அதனை யாருக்கும் தெரியாமல் கொண்டு சேர்க்கும்படி தனது நண்பனான வந்திய தேவனிடம் கொடுத்து அனுப்புகிறான். வீராணம் ஏரியில் இருந்து இந்த பயணம் தொடங்குகிறது. தஞ்சைக்கு சென்று சுந்தர சோழனை காண்பது, பழையாறைக்கு சென்று குந்தவை பிராட்டியை சந்திப்பது என அவன் பயணம் தொடங்குகிறது. காதல், போர், துரோகம், சூழ்ச்சி, வஞ்சகம் என கதை சுவாரஸ்யமாக நகர்ந்து செல்லும். அந்த வகையில், ‘பொன்னியின் செல்வன்’ என்ற பயணத்தை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் முன்னெடுத்துள்ளது. சென்னையில் தொடங்கும் இந்த பயணமானது தஞ்சாவூரில் முடிவடைகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் ஒருசில திட்டப்பணிகளை முடித்து சுற்றுலாத்துறையில் மாற்றங்கள் கொண்டுவர உள்ளனர். அதில் ஒரு பகுதியாக, பொன்னியின் செல்வன் பயணம் அமைய உள்ளது.செப்டம்பர் 15ம் தேதி பயணம் தொடங்குகிறது. 3 நாள் சுற்றுப்பயணமான இந்த ‘பொன்னியின் செல்வன்’ பயணத்திற்கான முன்பதிவு தொடங்கி நடந்து வருகிறது. தனிநபர், குடும்பம் என விருப்பத்தின் அடிப்படையில் பயணத்தை தேர்வு செய்து கொள்ளலாம். பயணத்திற்கான கட்டணம் ரூ.11 ஆயிரத்தில் இருந்து தொடங்குகிறது. விருப்பமுடையவர்கள் www.ttdconline.com என்ற இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம். இந்த பயணம் மட்டுமில்லாமல், இதுபோன்ற பல்வேறு சுற்றுலா பயணங்களை சுற்றுலாத்துறை தொடர்ந்து செயல்படுத்த உள்ளது. எனவே, சுற்றுலா பயணிகள் அனைவரும் பயணத்திற்காக காத்திருப்போம். …