சென்னை: சென்னை மாநகராட்சி 3 ஆக பிரிக்கப்படும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும். 50 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். தேசிய கல்வி கொள்கை முழுமையாக அமல்படுத்தப்படும் என்று தமிழக பாஜவின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக பாஜ சார்பில் தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. ‘தொலைநோக்கு பத்திரம் என்ற பெயரில் இந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் நிதின்கட்கரி வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் வி.கே.சிங், தமிழக பாஜ தலைவர் எல்.முருகன், எச்.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பாஜ வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு: 50 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். விவசாயிகளுக்கு வழங்கப்படுவது போல மீனவர்களுக்கும் வருடாந்திர உதவி தொகை 6000 வழங்கப்படும். தொழில் செய்ய ஏதுவான சூழ்நிலையை உருவாக்கி தென் இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவோம். தமிழகத்தில் உள்ள 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்களை மீட்டு பட்டியலின மக்களிடம் வழங்கப்படும். இந்து கோவில்களின் நிர்வாகம், தனித்து இயங்கும் வாரியத்திடம் ஒப்படைக்கப்படும். பூரண மதுவிலக்கு தமிழகத்தில் அமல்படுத்தப்படும். வேலையிழக்கும் டாஸ்மாக் ஊழியர்கள் மாநில அரசின் வேறு பிற துறைகளில் பணியமர்த்தப்படுவர். 18 முதல் 23 வயது வரை உள்ள இளம் பெண்களுக்கு இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் இலவசமாக வழங்கப்படும். 8ம் வகுப்பு 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக டேப்லெட் வழங்கப்படும். தேசிய கல்வி கொள்கை முழுமையாக அமல்படுத்தப்படும். பள்ளிப்பாடத்திட்டத்தில் ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், நாலடியார், விவேக சிந்தாமணி போன்ற நீதி நூல்கள் மற்றும் தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்ய பிரபந்தம் போன்ற ஆன்மிக நூல்கள் சேர்க்கப்படும். நிலத்தடி நீர்மட்டம் உயரவும், ஆறுகளில் நீரோட்டம் சீராக இருக்கவும், முற்றிலுமாக 5 ஆண்டுகளுக்கு ஆற்றுப்படுகைகளில் மணல் அள்ளுவது தடை செய்யப்படும். கள்ளத்தனமாக மணல் அள்ளுபவர்கள் மீதும், அதற்கு துணை ேபாகும் அதிகாரிகள் மீதும் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்.சென்னை மாநகராட்சி மூன்று மாநகராட்சிகளாக பிரிக்கப்படும். சட்ட மேலவை மீண்டும் கொண்டுவரப்படும். தற்போது இடஒதுக்கீட்டு சலுகை பெறாத சிறுபான்மை மதத்தினர் உட்பட 67 பிரிவினர் பயன்பெறும் வண்ணம் மத்திய அரசு கொண்டுவந்துள்ள பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு வழங்கியுள்ள 10 சதவீதம் இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும். அரசியலமைப்பு சட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிட்டுள்ளப்படி பசு இனத்தை பாதுகாக்க பசுவதை தடைச்சட்டம் அமல்படுத்தப்படும். இறைச்சிக்காக கேரளம் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு பசுக்கள் கடத்தப்படுவது முற்றிலும் தடுக்கப்படும். வழிபாட்டு உரிமை என்பது கட்டாய மதம் மாறுகின்ற உரிமையாகாது. ஆசை வார்த்தை காட்டி மற்றும் அச்சுறுத்தி மதம் மாற்றுவது கிரிமினல் குற்றமாக கருதப்பட்டு, கட்டாய மத மாற்ற தடை சட்டம் கொண்டு வரப்படும். மதக்கலவரம் ஏற்படாமல் தடுக்க நீதிபதி வேணுகோபால் தலைமையிலான ஆணையத்தின் பரிந்துரைகள் முழுமையாக அமல்படுத்தப்படும்….