பெரம்பலூர்,ஏப்.2: பெரம்பலூர் அருகே தீப்பிடித்து எரிந்த 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒதிய மரம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தண்ணீர்ப்பந்தல் என்ற இடமருகே வல்லாபுரம் பகுதியில் சாலையோரத்தில் இருந்த 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த, 50 அடி உயரம் கொண்ட ஒதிய மரம் இருந்தது. இந்த மரம் நேற்று தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் தீயணைப்புத்துறை வீரர்கள் பெரம்பலூர் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை உதவி மாவட்ட அலுவலர் வீரபாகு தலைமையில் அங்கு விரைந்து சென்றனர்.
மேலும் தேசிய நெடுஞ் சாலைத் துறை ஆணையத்தின்கீழ் பணிபுரியும் தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பு ஊழியர்கள், பெரம்ப லூர் மாவட்டநெடுஞ்சாலை போக்குவரத்துக் காவல் துறையினர் ஆகியோரும் அங்கு சென்று அந்த ஓதிய மரத்தின் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மரம் முறிந்து விழுந்தது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு மரத்தை அறுத்து அப்புறப்படுத்தும் பணிகளுடன், சாலையோர புதர்களில் பற்றிய தீயை அணைக்கும் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்றது. முற்றிலும் மரம் அகற்றப்பட்டு, சாலையோர முட்புதர்களின் தீயையும் தீயணைப்புத் துறையினர் முழுமையாக அணைத்தனர். இந்தத் தீ விபத்தால்அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.அவ்வழியாக சென்றவர்கள் சிகரெட்டை அணைக்காமல் போட்டதால் தீப்பிடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.