Sunday, June 16, 2024
Home » சென்னை ஐகோர்ட்டில் 2 புதிய நீதிபதிகள் பதவியேற்பு: நீதிபதிகளின் எண்ணிக்கை 58 ஆக உயர்வு

சென்னை ஐகோர்ட்டில் 2 புதிய நீதிபதிகள் பதவியேற்பு: நீதிபதிகளின் எண்ணிக்கை 58 ஆக உயர்வு

by kannappan

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு  கூடுதல் நீதிபதிகளாக  நியமிக்கப்பட்டுள்ள சுந்தர் மோகன், கே. குமரேஷ் பாபு ஆகியோர் நேற்று பதவியேற்றனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார். சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள காலியிடங்களை நிரப்பும் வகையில், வழக்கறிஞர்களாக இருந்த  என்.மாலா, சுந்தர் மோகன், கே. குமரேஷ் பாபு, எஸ்.சௌந்தர், அப்துல் ஹமீத், ஆர்.ஜான் சத்யன் ஆகியோரை நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் கடந்த பிப்ரவரி 16ம் தேதி பரிந்துரைத்தது. அதன் அடிப்படையில் முதல்கட்டமாக என்.மாலா, எஸ். சவுந்தர் ஆகியோரை  கூடுதல் நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்தார். அவர்கள் நீதிபதிகளாக பதவியேற்றனர். இந்நிலையில் சுந்தர் மோகன், கே. குமரேஷ் பாபு ஆகியோரை கூடுதல் நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, இரு புதிய நீதிபதிகளும், நேற்று  பதவியேற்றனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் புதிய நீதிபதிகளை, அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் மற்றும் மெட்ராஸ் பார் அசோசியேசன், பெண் வழக்கறிஞர்கள் சங்கம், லா அசோசியேசன் ஆகிய சங்கங்களின் பிரதிநிதிகள் வரவேற்று பேசினர். இவர்களின் நியமனங்கள் மூலம் நீதிபதிகள் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட  நீதிபதிகளின் எண்ணிக்கை 75 என்பதால் தற்போது 17 இடங்கள் காலியாக உள்ளது. நீதிபதி சுந்தர் மோகன், 1969ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி பிறந்தார். தந்தை வழக்கறிஞர், தாய் ஆசிரியர். சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்த அவர் 1991ம் ஆண்டு வழக்கறிஞராக பார் கவுன்சிலில் பதிவு செய்தார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான டான்சி வழக்கு, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு, மும்பை குண்டு வெடிப்பு வழக்கு உள்ளிட்ட உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளில் ஆஜராகியுள்ளார்.நீதிபதி கே.குமரேஷ் பாபு, சென்னையைச் சேர்ந்த இவரது தந்தை கபாலி சென்னை துறைமுகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். முதல் தலைமுறை பட்டதாரியான இவர், சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டம் முடித்து  1993ம் ஆண்டு வழக்கறிஞராக பணியை தொடங்கினார். தமிழக அரசின் சார்பில் 2001 முதல் 2002ம் ஆண்டு வரை அரசு வழக்கறிஞராகவும், 2020 முதல் 2021 வரை தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞராகவும் பல வழக்குகளில் ஆஜராகி உள்ளார்….

You may also like

Leave a Comment

ten − 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi