சென்னை: கொளத்தூரில் நவீன வேளாண் விற்பனை மையம் ரூ.1 கோடியில் அமைக்கப்படும் விவசாயிகளின் பசுமையான காய்கனிகள் சென்னை பெருநகரமக்களுக்கு கிடைத்திட வழி செய்திட சென்னை மாநகராட்சியில் உள்ள கொளத்தூரில் ’நவீன வேளாண் விற்பனை மையம்’ அமைக்கப்படும். இம்மையம் மூலம் நுகர்வோருக்கு நியாய விலையில் விளைபொருட்கள் விற்பனை செய்யப்பட்டு நுகர்வோரும் விவசாயிகளும் ஒருங்கே பயன்பெற வழிவகை செய்யப்படும். இம்மையம் ஒரு கோடி ரூபாய் செலவில் மாநில அரசு நிதியிலிருந்து ஏற்படுத்தப்படும்.* கிண்டியில் வேளாண் ஏற்றுமதி மையம்விவசாயிகளுக்கு ஏற்றுமதி குறித்த விவரங்கள், விற்பனை வாய்ப்புகள், தரச் சான்றுகள் பெறும் முறைகள் போன்றவற்றை ஒருங்கிணைத்து வழங்கிட வேளாண் ஏற்றுமதி சேவை மையம் அமைக்கப்படும். இதற்கென, சென்னை, கிண்டியில் ஏற்கனவே கட்டப்படும் கட்டடத்தில் ரூ.1 கோடி செலவில் மாநில நிதி ஒதுக்கீட்டில் கட்டமைப்பு வசதிகள் விரிவுபடுத்தப்படும்.* மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம்தமிழக அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை பட்ஜெட்டில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கூறியிருப்பதாவது: நெல் ஜெயராமனின் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம். ‘விதையொன்று போட சுரையொன்று முளைக்குமா’ என்பது ஊரகப் பழமொழி. தமிழ் இலக்கியங்களில் செஞ்சம்பா, சீரக சம்பா என்பன அவற்றுள் சில. அதைப்போலவே ‘செங்கோட்டுப்பள்ளு’ எனும் நூலில் 32 சம்பா நெற்பெயர்கள் காணப்படுகின்றன. தமிழகத்தின் பாரம்பரிய நெல் வகைகளைத் திரட்டி, பாதுகாத்து, பார்வைக்குட்படுத்தி பேணிக் காக்கிற பெரும் பொறுப்பு இத்துறைக்கு உள்ளது. அவற்றை திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, திருப்பூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், தேனி, திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள அரசு விதைப்பண்ணைகளில் 200 ஏக்கர் பரப்பளவில் விதை உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இத்திட்டம் ரூ.25 லட்சம் செலவில் மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.* வேளாண் தொழில் முனைவோராக இளைஞர்கள்தமிழகத்தில் எண்ணற்ற இளைஞர்கள் வேளாண் கல்வியை தேர்ந்தெடுக்கிறார்கள். அவர்கள் வேலை தருவோராக மாறும்போதுதான் வேளாண் துறையில் முன்னேற்றம் முயல் வேகத்தில் நிகழும். அதை மனதில் கொண்டு, வேளாண் பட்டதாரிகளைத் தொழில்முனைவோராக ஆக்குவதில் இவ்வரசு தீவிர கவனம் செலுத்தும். இதற்காக, பட்டப்படிப்பிலேயே வேளாண் தொழில்முனைவோர் ஆவதற்குத் தேவையான பயிற்சிகள், வேளாண் வணிக நிறுவனங்களின் ஒத்துழைப்போடும், முன்னாள் மாணவர்களின் பங்களிப்போடும் நிகழ்த்தப்படும். இறுதி ஆண்டு படிக்கும்போதே அவர்களுக்குள் தொழில்முனைவோர் ஆக வேண்டும் என்கிற தணியாத தாகம் உருவாக்கப்படும். அவர்கள் இன்று சந்தையிலிருக்கும் இடைவெளிகளை எல்லாம் தெரிந்துகொண்டு, சொந்தத் தொழில் தொடங்குவதில் உள்ள நெளிவுசுளிவுகளை அறிந்துகொண்டு படிப்பை முடித்து வெளிவருகிறபோதே சான்றிதழைக் கைகளிலும், செயல் திட்டத்தை இதயத்திலும் தாங்கி வெளிவருவார்கள். வேளாண் துறை நடைமுறையில் சந்திக்கும் சவால்கள் அவர்களால் பெருமளவு தீர்க்கப்படும்.இத்திட்டம் 2 கோடியே 68 இலட்சம் ரூபாய் ஒன்றிய, மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.* திருவாரூரில் பருத்தி விதை நீக்கும் இயந்திரம்அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் கூறியிருப்பதாவது: ‘வெள்ளைத் தங்கம்’ என்று அழைக்கப்படும் பருத்திப் பயிரானது, தமிழ்நாட்டில் உள்ள 2013 நூற்பாலைகளுக்கு மூலப்பொருளை வழங்குகிறது. நடப்பாண்டில் 1.7 லட்சம் எக்டரில் பருத்தி சாகுபடியை மேற்கொண்டு, சுமார் நான்கு லட்சம் பொதிகள் உற்பத்தி செய்யயப்படும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், கடலூர் ஆகிய மாவட்ட ஒழுங்குமுறைக்கூடங்களில் பருத்தி வரத்து அதிக அளவில் உள்ளதால், இப்பகுதி பருத்தி விவசாயிகளுக்கு அதிக விலை கிடைக்க வேண்டும் என்பதற்காகப் பருத்தியில் விதை நீக்கி, தரம் பிரித்து, ஈரப்பத அளவு, பருத்தியின் தன்மை, தரக்குறியீடு ஆகியவற்றை மதிப்பீடு செய்து விற்பனை செய்வதற்கு இந்த அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும். நடப்பாண்டில், பருத்தி வரத்து அதிகம் உள்ள திருவாரூர் பகுதி விவசாயிகள் பயனடைவதற்காக, திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நாளொன்றுக்கு 50 மெட்ரிக் டன் திறனுள்ள பருத்தி விதை நீக்கும் இயந்திரம் நிறுவப்படும். …