சென்னை: சென்னை யில் நிர்பயா நிதி திட்டத்தில் பெண்களுக்கான நடமாடும் கழிப்பறைகள், மாநகராட்சி பள்ளிகளில் கேமரா அமைத்தல் உள்ளிட்ட 101 தீர்மானங்கள் மன்ற கூட்டத்தில் நிறை வேற்றப்பட்டன. சென்னை மாநகராட்சியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்ற உறுப்பினர்களின் முதல் கூட்டம் கடந்த மாதம் நடந்தது. அப்போது மாநகராட்சியின் 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதுடன், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து, மண்டல குழு தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டு மண்டல அளவிலான முதல் கூட்டம் இந்த மாதம் நடந்தது.கூட்டத்தில், மண்டல அளவில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு நிலைக் குழுக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நிலைக் குழுவில் மண்டல தீர்மானங்கள் அடிப்படையில் எந்தெந்த பணிகள் மேற்கொள்வது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று காலை 10 மணிக்கு சென்னை மாநகராட்சி கூட்டம் தொடங்கியது. மேயர் பிரியா தலைமை வகித்தார். கூட்டத்தில், துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.கூட்டத்தில், கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் நிலவும் பிரச்னைகள் குறித்த தங்களது கேள்விகளை எழுப்பினர். அதற்கு மேயர் பிரியா பதிலளித்து பேசினார். அப்போது, 72வது வார்டு திமுக உறுப்பினர் சரவணன் கேள்வி எழுப்பி பேசுகையில், ‘புளியந்தோப்பு பகுதியில் உள்ள ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி கூடத்தில் இருந்து கழிவுகள் மழைநீர் கால்வாய்களில் கலப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. குடிநீர் வசதி, மின்சார வசதி, கழிவறை வசதிகள் எதுவும் இல்லை. இங்கு மேயர் ஆய்வு செய்தும் அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என்றார்.அதற்கு பதிலளித்து பேசிய மேயர் பிரியா, ‘ஏற்கனவே ஒப்பந்ததாரர்கள் மூலம் மழைநீர் கால்வாயில் கொட்டப்பட்டு வரும் கழிவுகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. சுகாதார சீர்கேடுகளை அகற்றும் நடவடிக்கை மண்டல ஊழியர்கள் மூலம் மேற்கொள்ளப்படும்’ என்றார். பின்னர் சுதர்சனம் எம்எல்ஏ எழுந்து சில கோரிக்கைகள் குறித்து பேசுகையில், ‘சிங்கார சென்னை 2.0 திட்டங்கள் கீழ் மாதவரம் தொகுதியில் உள்ள குளங்களை தூர்வார வேண்டும். குப்பை சேகரிக்கும் வாகனங்களில் நிறைவான வசதிகள் இல்லை. மழைநீர் வடிகால் பணியின் போது முறையாக புதைவட கம்பிகள் இணைப்புகளை பராமரிப்பதில்லை’ என்றார். தொடர்ந்து, 141வது வார்டு உறுப்பினர் ராஜா அன்பழகன்(திமுக) பேசுகையில், ‘மாம்பலம் கால்வாய் செல்லும் வழியில் கான்கிரீட் அடைப்பு உள்ளது. அதனை அகற்ற வேண்டும். தி.நகர் முத்துரங்கம் சாலையில் உள்ள கால்நடை கருத்தடை மையத்தில், சென்னை சுற்றுப்புற பகுதிகளில் இறந்துபோகும் ஆதரவற்ற கால்நடைகளை கொண்டுவந்து புதைக்கின்றனர்’ என்றார். இதற்கு பதில் அளித்த மேயர் பிரியா, `உறுப்பினரின் கோரிக்கை குறித்து ஆணையர் மற்றும் வட்டார துணை ஆணையர்களுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.காங்கிரஸ் உறுப்பினர் எம்.எஸ்.திரவியம் பேசுகையில், ‘காமராஜரின் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக அனைத்து பள்ளிகளிலும் கொண்டாட வேண்டும் என்று கலைஞர் முதல்வராக இருந்த போது ஆணை பிறப்பித்தார். அது சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு அன்றைய தினம் கட்டுரை போட்டி, பேச்சு போட்டி நடத்தி உற்சாகப்படுத்த வேண்டும். சென்னை மாநகராட்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் படம் வைக்க வேண்டும்’ என்றார். இறுதியாக, நிர்பயா நிதி திட்டத்தின் கீழ் பெண்களுக்கான நடமாடும் கழிப்பறைகள், மாநகராட்சி பள்ளிகளில் கேமரா அமைப்பது உள்ளிட்ட 101 தீர்மானங்கள் சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கியமானவை வருமாறு:* மெட்ரோ ரயில் திட்ட பணிகளுக்காக மெரினாவில் உள்ள காந்தி சிலையை அவ்வையார் சிலைக்கு அருகில் அமைக்கப்படும்.* மாம்பழம் ரயில் நிலையத்தில் இருந்து தி.நகர் பேருந்து நிலையத்தை இணைக்கும் ஸ்கைவாக் ஆகாய நடைபாதை திட்டத்திற்கு கால நீட்டிப்பு.* சென்னை முழுவதும் பல்வேறு இடங்களில் பல்வேறு துறை நிதிகளின் மூலமாக மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கப்படும்.* சென்னையில் ஸ்பா மசாஜ் சென்டர்கள், அழகு நிலையங்களுக்கான தொழில் உரிமம் வழங்கும் விதிகளை மாநகராட்சி முனிசிபல் சட்ட அட்டவணையில் சேர்க்கப்படும்.* தமிழ்நாடு அரசின் அரசாணையின்படி சொத்து வரி பொது சீராய்வை நடைமுறை படுத்தப்படும்.* நிர்பயா நிதி திட்டத்தின் கீழ் பொது இடங்களில் பெண்களுக்கு நடமாடும் கழிவறை, சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவ, மாணவியரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பதற்கான ஒப்பந்தம் வழங்க அனுமதி.* சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்படும் 779 பேருந்து நிழற்குடைகளை மேம்படுத்தப்படும். 156 இடங்களில் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைக்கப்படும்.* இந்த ஆண்டு பருவ மழையை முன்னிட்டு மழைநீர் வடிகால் தூர்வாரும் சிறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.* ராணி மேரி கல்லூரியில் ரவீந்திரநாத் தாகூர் சிலை அமைக்கப்படும். காந்தி மண்டபத்தில் சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் பா.சுப்பராயன் சிலை அமைக்கப்படும். அண்ணா பல்கலைக்கழகத்தில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் சிலை அமைக்கப்படும். சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் சிலை அமைத்தற்கும், பத்மாவதி நகர் பிரதான சாலையை சின்ன கலைவாணர் விவேக் சாலை என பெயர் மாற்றம் செய்ததற்கும் ஒப்புதல் கோருதல் உள்பட 101 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன….