சென்னை: மாண்டஸ் புயலால் பெய்த கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கனமழையால் புழல் ஏரியில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. நேற்று ஏரிக்கு 140 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 2795 கனஅடியாக அதிகரித்துள்ளது. தற்போது ஏரியில் நீர் இருப்பு 2,508 மில்லியன் கனஅடியாக உள்ளது. 2வது நாளாக ஏரியில் இருந்து 100 கனஅடி நீர் உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக புழல் ஏரியில் இருந்து வினாடிக்கு 159 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதேபோல் சோழவரம் ஏரியிலும் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. 1,081 கனஅடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் நேற்று நீர்வரத்து 36 கனஅடியாக இருந்தது. இன்று ஏரிக்கு 287 கனஅடியாக நீர் வந்துகொண்டிருக்கிறது. ஏரியில் தற்போது 554 கனஅடி நீர் இருப்பு உள்ளது. 500 மில்லியன் கனஅடி கொண்ட கண்ணன்கோட்டை ஏரியானது மீண்டும் நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. ஏரிக்கு 35 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் கலங்கள் வழியாக 25 கனஅடி நீர் உபரிநீர் வழிந்தோடுகிறது. …